உவமை அணி என்றால் என்ன? வகைகள் யாவை?

உவமை அணி என்றால் என்ன வகைகள் யாவை

“பண்பும் தொழிலும் பயனும் என்று இவற்றின்

ஒன்றும் பலவும் பொருளொடு பொருள் புணர்த்து

ஒப்புமை தோன்றச் செப்புவது உவமை” (தண்டியலங்காரம்.30)

     பண்பு, தொழில், பயன் ஆகிய இவற்றில் ஒன்றாகவும் பலவாகவும் சேர்ந்து வருகின்ற பொருளோடு இயைபுபடுத்தி ஒப்பிட்டு உரைப்பது உவமையணி எனப்படும்.


(உம்)   “தாமரை யன்று முகமே ஈங்கிவையும்

காமரு வண்டுஅல்ல கருநெடுங்கண் – தேமருவு

வல்லியின் அல்லள் இவள்என் மனம்கவரும்

அல்லி மலர்க்கோதை யாள்”

இது தாமரை மலரல்ல; இவள் முகமே! இவள் முகத்தில் இருப்பதும் தேன் உண்ணும் வண்டு அல்ல; அவளின் கருமையான கண்களே! இவள் தளிர் போன்ற பூங்கொடி அல்லள்; என் மனதைக் கவர்ந்த மாலை அணிந்த மடந்தையே!
மேலும்,
           

1.பண்பு உவமை           

2.தொழில் உவமை           

3.பயன் உவமை

என்று வகைப்படுத்தலாம்.


1.பண்பு உவமை
           

“பவளத்து அன்ன மேனி“ – இதன் வண்ணம் பண்பு. பவளம் போன்ற மேனி
  

“வேய் புரை பணைத் தோள்” – வேய் – மூங்கில்.

தோளுக்கு உவமை. வடிவுப் பண்பு ஆகும்


2.தொழில் உவமை
           

“அரிமா அன்ன வணங்குடைத் துப்பின்           

திருமா வளவன்”

சிங்கம் போன்ற வலிமையுடையவன் திருமாவளவன் என்பதாம். அரசனின் வலிமையை உரைத்து அவனது போர்த்திறனை (தொழில்) வெளிப்படுத்தி நிற்பதால் தொழில் உவமை ஆயிற்று.


3.பயன் உவமை
           

“மாரி அன்ன வண்மைத்           

தேர்வேள் ஆயைக் காணிய சென்மே”

மேகத்தைப் போன்று கைம்மாறு கருதாது கொடைத்தன்மையை உடையவன் ஆய் அண்டிரன் ஆவான். மன்னனின் கொடைப்பயனையும் மழையின்  பயனையும் எடுத்துரைத்தது.
இத்தகைய உவமையானது, கீழ்க்கண்டவற்றுள் இயைபுபடுத்தி உரைத்து நிற்கும்.
           

1.ஒரு பொருளோடு ஒரு பொருளும்           

2.பல பொருளோடு ஒரு பொருளும்           

3.ஒரு பொருளோடு பல பொருளும்           

4.பல பொருளோடு பல பொருளும்

1.ஒரு பொருளோடு ஒரு பொருளும்           

“செவ்வான் அன்ன மேனி”

இவற்றில், செவ்வானமாகிய ஒரு பொருள் இறைவன் திருமேனிக்கு உமையாகக் கூறப்பட்டது.


2.பல பொருளோடு ஒரு பொருளும்
           

“பெரும்பெயர்க் கரிகாலன் முன்னிலைச் செல்லாப்           

பீடின் மன்னர் போல           

ஓடுவை மன்னால் வாடைநீ எமக்கே”

கரிகாலன் மன்னனிடம் முன்னே சென்று போரிட துணிவு இல்லாமல் புறமுதுகிட்டு ஓடுதலும்,
வாடைக் காற்றே! நீயும் என்னுடைய தலைவன் வருகை கண்டதும் விரைந்து ஓடுவாய் என்றும்  கூறப்படுகிறது.


3.ஒரு பொருளோடு பல பொருளும்

”செவ்வான் அன்ன மேனி

அவ்வான் இலங்கு பிறை யன்ன

விளங்கு வால் வை யெயிறு”

பிறைச் சந்திரனின் வெண்மை போன்று தலைவனின் பற்கள் வெண்மையாக உள்ளன என்பதாம். இங்கு பிறையாகிய ஒரு பொருள் மீது பற்களாகிய பல பொருளை உவமையாகக் கூறப்பட்டது.


4.பல பொருளோடு பல பொருளும்

“களிறு எறி சுறவினத்து அன்ன வாளோர் மொய்ப்ப

மரீஇயோர் அறியாது மைந்து பட்டன்றே”

சுறா மீன் போன்ற கூட்டத்தையுடைய வீரர்களை மதம் கொண்ட யானைபாகரை மதியாது அழித்தது என்பதாம்.  சுறா இனங்கள் – வாளேந்திய வீரர்கள் கூட்டம்.

உருவக அணி என்றால் என்ன? அதன் வகைகள் யாவை?

Leave a Reply

Translate »