🔔அகத்திணையை முழுமையான அளவில் பாடல்களைக் கொண்டமையால் ‘அகம்’ எனவும் அகப்பாட்டு எனவும் அழைப்பர்.
🔔 13 அடி சிற்றெல்லையும் 31 அடி பேரெல்லையும் கொண்ட 400 செய்யுட்களைக் கொண்டது.
🔔ஐந்திணையும் தழுவி ‘அகம்’ எனும் பெயரமைந்து காணப்படுகின்றது.
🔔அகம்பற்றிக் கூறும் 400 பாக்களைக் கொண்டதனால் ‘அகநானூறு’ என்பர்.
🔔அகம் பற்றிய எட்டுத்தொகை நூல்களுள் நீண்டு காணப்படுவதால் ‘நெடுந்தொகை’ என்றும் வழங்கப்படுகின்றது.
🔔அகப்பாட்டு, பெருந்தொகை நானூறு என வேறுபெயர்களும் இதற்கு உண்டு.
🔔இந்நூலின் பெரும்பான்மையான பாடல்களில் அகப்பொருளின் மூலக் கூறுகளாகிய முதல், கரு, உரிப் பொருள் பற்றிய செய்திகள் அழகுறக் கூறப்பட்டுள்ளன.
🔔இவற்றை விரிவாகக் கூறுவதற்கு ஏற்ற வகையில் இதன் பாடல்கள் நீண்ட அமைப்புடையதாகப் படைக்கப்பட்டுள்ளன.
🔔இந்நூலைத் தொகுத்தவர் உப்பூரிக்குடிகிழார் மகன் உருத்திர சன்மன், தொகுப்பித்தவன் பாண்டியன் உக்கிரப் பெருவழுதி.
🔔145 புலவர்கள் இப்பாடல்களைப் பாடியுள்ளனர்.
🔔இதில் பாரதம் பாடிய பெருந்தேவனாரால் கடவுள் வாழ்த்துச் செய்யுள் பாடப்பட்டுள்ளது.
🔔பாயிரம் இயற்றியவர் இடையன நாட்டு மணக்குடியான் பால்வண்ண தேவனான வில்வதரையன் என்பவர் ஆவார்.
அகநானூற்றுப் பிரிவுகள்
🔔இந்நூலின் பாகுபாடு ஒரு தனிச் சிறப்புடையதாக விளங்குகின்றது. இப்பாகுபாடு பற்றி,
‘களித்த மும்மதக் களிற்றியானை நிரை
மணியொடு மிடைந்த அணிகிளர் பவளம்
மேவிய நித்திலக் கோவை என்றாங்கு
அத்தகு பண்பின் முத்திறம்‘
என்று வரும். அகநானூற்றுப் பாடல்களை மூன்று வகைகளாகப் பகுத்துள்ளார்கள்.
🔔01 முதல் 120 வரையிலான பாடல்கள் – களிற்றியானை நிரை (செருக்குற்றுச் செம்மாந்து செல்லும் பாக்கள்)
🔔121 முதல் 300 வரையிலான 180 பாடல்கள் – மணிமிடைப்பவளம் (மணியும் பளவமும் கலந்தாற்போன்று காட்சி தரும் பாக்கள்)
🔔301 முதல் 400 வரையிலான இறுதி 100 பாடல்கள் – நித்திலக்கோவை (நல்முத்தின் ஒளியெனவே பொருட் சிறப்பால் பொலிவுற்றிலங்கும் பாக்கள்) முத்திறந்ததாகப் பாகுபடுத்தியுள்ளனர்.
🔔1, 3, 5, 7 என ஒற்றை எண்ணாக வரும் பாடல்கள் பாலைத் திணைக்குரியன.
🔔4, 14, 24 என நான்கு எனும் எண்ணுடன் முடிபவை முல்லைத்திணைக்குரியன.
🔔6, 16, 36 என ஆறு எனும் எண்ணில் முடிவன மருதத்திணைக்குரியன.
🔔2, 8 என இரண்டையும் எட்டையும் இறுதியாகக் கொண்ட பாடல்களைக் குறிஞ்சித் திணைக்குரியன.
🔔10 என முடிவனவற்றை நெய்தல் திணைக்குரியன.
”ஒன்று மூன்று ஐந்து ஏழ் ஒன்பான் பாலை ஓதாது
நின்றவற்றின் நான்கு நெறிமுல்லை – அன்றியே
ஆறாம் மருதம் அணிநெய்தல் ஐயிரண்டு
கூறுதலை குறிஞ்சிக் கூற்று”
என வரும் வெண்பா இப்பகுப்பு தெளிவாக்குவதாக அமைந்துள்ளது.
🔔அகநானூற்றில் பாலைத்திணைப் பாடல்களே அதிக எண்ணிக்கையுடையதாக இடம் பெற்றிருக்கிறது.
🔔மொத்தம் 200 பாலைப் பாடல்களும், 80 குறிஞ்சிப் பாடல்களும், முல்லை, மருதம், நெய்தல் திணைகட்குத் தனித்தனியே 40 பாடல்களும் அமைந்துள்ளன.
பெயரும் உரையும்
🔔இந்நூலிலும் ஊட்டியார் (அகம் 388), நோய்பாடியார் (அகம் 671) என சொற்றொடரால் பெயர் பெற்ற புலவர்கள் இடம் பெற்றிருக்கக் காணலாம்.
🔔இதன் முதல் 90 பாடல்களுக்கு மட்டும் பழைய குறிப்புரை ஒன்று உண்டு.
🔔இதன் முதல் பதிப்பாசிரியர் வே. இராசகோபால ஐயங்கார் ஆவார். இவர், முதல் 70 பாடல்களுக்கு உரை எழுதினார்.
🔔பிற்காலத்தில் நாவலர். ந.மு வேங்கடசாமி நாட்டார் அவர்களும், கரந்தைக் கவியரசு
🔔ரா.வேங்கடாசலம் பிள்ளையும் முழுமைக்கும் சிறந்த உரை எழுதியுள்ளனர்.
🔔நூல் அகப்பொருள் நூலான இது புறப்பொருள் நூலைப் போல தமிழகத்தின் வரலாற்றுச் செய்திகளையும் அறிவிக்கின்றது.
சிறப்புச் செய்திகள்
🔔தித்தன், மத்தி, நன்னன், கரிகாற் பெருவளத்தான், தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் போன்ற பெருநில வேந்தர் பற்றியும்
🔔ஆதன் எழினி, ஆட்டனத்தி, அன்னி, மிஞிலி, பாணன், பழையன், பாரி, காரி, கொடித்தேர்ச் செழியன், அத்தி, கங்கன், கட்டி, கடையன், புல்லி, திரையன் போன்ற குறுநில மன்னர்களை பற்றியும் எண்ணற்ற வரலாற்றுச் செய்திகளைத் தருகின்றது.
🔔அலெக்சாண்டரின் படையெடுப்புக்கு அஞ்சி நந்தர்கள் தமது செல்வங்களையெல்லாம் கங்கையாற்றின் புதைத்து வைத்த வரலாற்றுச் செய்தியும் இந்நூலின் 20, 25 ஆம் பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
🔔கி. மு. 310 இல் நிகழ்ந்த சந்திரகுப்த மோரியனின் மாமனான பிந்துசாரனின் தென்னகப் படையெடுப்புக்கு வடுகர் உதவினர் என்பதை அகம் 273 ம் பாடலில் மாமுலனார் அடிகள் காட்டுகின்றனர்.
🔔வரலாற்றுச் செய்திகளோடு பல இதிகாச, புராணச் செய்திகளும் இதில் இடம் பெற்றுள்ளன.
🔔வரலாற்றுச் செய்திகளை அதிகம் கொண்ட சங்க இலக்கிய அக இலக்கிய நூல் அகநானூறு.
🔔வரலாற்றுச் செய்திகளை அதிகமாகக் கூறும் புலவர்கள் பரணர் மற்றும் மாமூலனார் ஆவார்கள்.
🔔ஆதிமந்தி – அத்தி காதல் பிரிவு ஆடல் ஆகிய வரலாற்றுச் செய்தி
🔔இராமன் கோடிக்கரையில் பறவை ஒலியடங்கச் செய்தலாகிய இராமாயணச் செய்தி
🔔கண்ணன் கோபியர் ஆடைகளைக் கவா்ந்தமை
🔔திருமால், முருகன், கண்ணன் பலராமன் முதலியோர் செயல்கள்
🔔புலவர்கள் ஒருவரையொருவர் மதித்தல், தினையுண்ண வந்த யானை குறத்தியர் பாடல்கேட்டு உறங்குதல் (102) பங்குனிவிழா (137), கார்த்திகை விளக்கு, பிள்ளைகட்கு ஐம்படைத் தாலி அணிவித்தல் (54), வற்றிய வயிறும் நீராடா உடலுமுடைய சமணத் துறவிகள் வாழ்ந்து வந்தமை (123) போன்ற பல செய்திகள் கூறப்பட்டுள்ளன.
🔔உள்ளுறை, இறைச்சி இயற்கை வர்ணனை போன்றவை அகநானூற்றில் மிகுந்துள்ளன.
🔔கந்து என்பது வழிபாட்டிற்குரிய மரத்தூண்
🔔நாடாளும் தலைவர்களைத் தேர்ந்தெடுக்கக் குடவோலை முறை இருந்தள்ளதை அறியலாம்.
‘யவனர் தந்த வினைமாண் நன்கலம்
பொன்னோடு வந்து கறியொடு பெயரும்‘
🔔யவனர்கள் நம் நாட்டு வாசனைப் மிளகைப் பெறுவதற்காகவே, தமிழகத்துடன் வாணிபத் தொடர்பு கொண்டிருந்த வாணிப வளமும் அறியப்படுகின்றது.
🔔தமிழரின் திருமண நிகழ்ச்சியினை, 86, 136 ஆகிய இரு பாடல்களும் விளக்குகின்றன.
🔔இம்மணவிழாவில் மணப்பந்தலில் வெண்மணல் பரப்பி விளக்கேற்றி. மணமகளுக்கு தீராட்டி தூயஆடை அணிகலன் அணிவித்து, இறைவழிபாடு நடத்தி, திங்கள் உரோகிணியைக் கூடிய நல்லவேளையில் வாகை இலையோடு அருகின் கிழங்கும் சேர்த்துக் கட்டப்பெற்ற வெண்ணூலைத் தலைவிக்குக் காப்பாகக் குட்டுவர்’ என்று விளக்கப்படுகிறது.
🔔தேனருந்தும் வண்டுகள் அஞ்சி ஓட விடுமே எனக் கவன்று தன் தேரில் அசைந்தாடும் மணியின் நாவினைக் கட்டி விட்டு தேரில் விரைந்து வரும் தலைவனின் மன உணர்வையும் நாம் இதில் கண்டு மகிழலாம்.