மக்களின்பயன்பாடும் பழக்கவழக்கமும்

      மனித சமூகத்தில் தோன்றும் சில நடத்தைகள் காலப்போக்கில் அச்சமூகத்தின் பழக்கமாகவும் பின்பற்றும் வழக்கமாகவும் மாறிவிடுகின்றன. பழங்கால மக்கள் அவர்களுடைய அன்றாட வாழ்வில் சில ஒழுங்குமுறைகளைக் கடைபிடித்தனர். அவை பின்னாளில் வழக்கமாக மாறின. இத்தகு பழக்கவழக்கங்கள் ஒவ்வொரு பகுதி மக்களிடையேயும் தனித்தனியான விளக்கங்கள் தரப்பட்டு வெவ்வேறு வகைகளில் வழங்கி வருவதைக் காணலாம். நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் நம் முன்னோர் விட்டுச் சென்ற சில கூறுகளைக் காணஇயலும். உதாரணமாக இந்து சமயத்தினர் கோயிலில் கடவுளை வணங்கும் போது இரு கரங்களைக் கூப்பி வணங்க வேண்டும் என்பது பழக்கம். அதனால் அப்பழக்கத்தை இறைவழிபாடு செய்வோர் வழக்கமாக்கிக் கொண்டனர். ஆனால் இத்தகு வழக்கம் இசுலாமிய சமயத்திலும் கிறித்துவத்திலும் மாறுபட்ட ஒன்றாக அமைகின்றன. எனவே ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் குழு நடத்தையானது பின்னாளில் தலைமுறை தலைமுறையாகத் தொடர்கின்றது எனலாம்.
           

     சங்க கால மக்களிடையேயும் இவ்வாறான பழக்கவழக்கங்கள் நடைமுறையில் இருந்துள்ளன. வாழ்நாளில் ஒவ்வொரு செயலைச் செய்யும் போதும் அவற்றில் சில நடத்தை விதிமுறைகளைப் பின்பற்றியுள்ளனர். ஒரு செயலை மேற்கொள்ளும்போது முன்னர் எதனைச் செய்யவேண்டும் அதனைத் தொடர்ந்து என்ன செய்யவேண்டும் என்ற நிரல் அமைப்பும் ஒழுங்கமைப்பும் பழந்தமிழரின் நடத்தைகளில் காணமுடிகிறது. “தெய்வம், விருந்தினர், சுற்றத்தார் மற்றும் தன் குடும்பம் இவற்றைப் பாதுகாப்பது இல்லறத்தானின் கடமையாகும். விருந்தினரை வழி அனுப்பும் போது ஏழடி உடன் பின் சென்று அனுப்புதல் வழக்கம்”1 எனப் பா. இறையரசன் கூறுவது பழங்காலத்தில் விருந்தினரைப் பேணுதலில் கடைபிடிக்கப்பட்ட ஒழுங்குமுறையைக் காட்டுகின்றது.

இன்றும் இவ்வழக்கம் நம்மிடையே நிலவுவதைக் காணமுடிகிறது. சங்ககால மக்கள் பின்பற்றிய ஒழுங்கியல் சார்ந்த நடத்தை முறைகளையும் அந்த நடத்தைகளில் காணப்படும் நுட்பங்களையும் இவ்வியல் ஆராய்கிறது.
மகளிரும் பழக்கவழக்கமும்
            பொருள்தேடச் சென்ற தலைவன் திரும்பி வருவேன் என்று உரைத்த கார்காலம் வந்துவிடுகிறது. ஆனால் தலைவன் வரவில்லை. கார்ப்பருவங்கண்டு தலைவி கவலை கொள்கிறாள். இதனை,
“கோடு வாய் கூடாப் பிறையை, பிறிது ஒன்று
நாடுவேன் கண்டனென் சிற்றிலுள் கண்டு ஆங்கே,”
(கலி.142:24-25)
என்ற பாடலடிகளில், ஊரில் யாரோ சொன்னார்கள் என்று அவள், தன்னுடைய சிறிய இல்லத்தினுள் சென்று கூடலிழைத்தாள். கூடலிழைத்தல் என்பது கண்களை மூடிக்கொண்டு, தலையில் வட்டம் இடுதல் வேண்டும். இரண்டு முனையும் ஒன்றாகச் சேர்ந்தால் தலைவன் வருவான். சேராவிட்டால் தலைவன் வரமாட்டான் என்று கொள்வது மரபு என்பதை மேற்கண்ட பாடல் உரைக்கின்றது.

   இவ்வழக்கமானது இன்றும் கிராமங்களில் சிறுவர்கள் இவ்வாறு விளையாடுதலைக் காணலாம். பொருள்மேற் சென்ற பின்பு தலைவியானவள் தலைவன் சென்ற நாட்களை எண்ணி சுவரிலே கோடிட்டுக் கொண்டிருந்தாள் என்பதனை,
“நாள் இழை நெடுஞ்சுவர் நோக்கி, நோய்உழந்து”(அகம்.61:4)
என்னும் பாடலடி காட்டுகிறது. இத்தகு செய்தியைச் (குறுந்:358), (அகம்:351) சங்க இலக்கியப் பாடல்கள் சிலவற்றில் காணமுடிகிறது. பிரிந்து போன தலைவன் வரும் வரையில் தலைவியின் எண்ணம் முழுவதும் அவனை நினைத்துக் கொண்டிருக்கும். சுவரில் கோடிட்டுத் தன் ஆற்றாமையை வெளிப்படுத்துவதை அக்கால மகளிர் வழக்கமாகவே கொண்டிருந்தனர்.

Leave a Reply

Translate »