உருவக அணிஎன்றால் என்ன? அதன் வகைகள் யாவை?

”உவமையும் பொருளும் வேற்றுமை ஒழிவித்து
ஒன்றென மாட்டின் அஃது உருவகம் ஆகும்”
உவமையாகிய பொருளையும் உவமிக்கப்படும் பொருளையும் வேறுபாடு இல்லாது தவிர்த்து இரண்டுமே ஒன்றுதான் எனத் தோன்றுமாறு ஒருமித்து உரைப்பது உருவக அணி எனப்படும்.
(உம்) “வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காகச் – செய்ய
சுடராழி யான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை
இடராழி நீங்கவே என்று”
உலகம் விளக்காகவும் கடல் நெய்யாகவும் சூரியன் ஒளியாகவும் (விளக்கு) சக்கராயுதம் தரித்த திருமால் திருவடிக்கு, என் துன்பம் நீங்க வேண்டும் என்று சொல்மாலை சூட்டினேன்.
உருவக அணியின் வகைகள்
”தொகையே விரியே தொகைவிரி எனா (அ)
இயைபே இயைபிலி வியநிலை எனாஅச்
சிறப்பே வரூபகம் சமாதானம் எனாஅ
உருவகம் ஏகம் அநேகாங்கம் எனாஅ
முற்றே அவயவம் அவயவி எனாஅச்
சொற்றஐம் மூன்றும் மற்றதன் விரியே”
1.தொகை உருவகம்
ஆகிய உருபு சேர்த்து வருவது. இது ஆக எனக் குறைந்து வருவதும் உண்டு.
(உம்) அங்கைமலர் (அங்கையாகிய மலர்), மாதர்க்கொடி (மாதராகிய கொடி)
2. விரி உருவகம்
தொகுத்துச் சொன்னதை இங்கு விரித்துக் கூறுவது விரி உருவகம் ஆகும்.
(உம்) ”கொங்கை முகையாக மென்மருங்குல் கொம்பாக
அங்கைமலரா அடிதளிராத் – திங்கள்“
மார்பகம் அரும்பாகவும் இடையானது பூங்கொம்பாகவும் அழகியகை மென்மலராகவும் என விரித்துக் கூறுகிறது.
3.தொகை விரி உருவகம்
தொக்கியும் விரித்தும் நிற்கின்ற உருவகம் தொகை விரி உருவகம் ஆகும்.
(உம்) “வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காகச் – செய்ய
சுடராழி யான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை
இடராழி நீங்கவே என்று”
இச்செய்யுளில் தகளியா என்னும் இடத்தில் ஆ என உருபு விரிந்தும், நெய்யாக என்னும் இடத்தில் ஆக என உருபும் இடராழி என்னும் இடத்தில் ஆகிய என்னும் உருபு தொக்கியும் வந்துள்ளன.
4.இயைபு உருவகம்
பலப்பொருட்களை உருவகிக்கும்போது தம்முள் இயைபு உடையவனாக கொண்டு இயங்குவது இயைபு உருவகம் எனப்படும்.
(உம்) ”செவ்வாய்த் தளிரும் நகைமுகிழும் கண்மலரும்
மைவார அளக மதுகரமும் – செவ்வி“
சிவந்த வாயாகிய தளிரும், நகையாகிய முல்லை அரும்பும், கண்ணாகிய மலரும், கருமையான நீண்ட கூந்தலாகிய வண்டும் என தம்முள் இயைபு உடையவனாக உருவகமாக்கிக் கூறுகிறது.
5.இயைபிலி உருவகம்
பல பொருளும் தம்முள் இயைபின்றி வைத்து உருவகம் செய்வதாகும்.
(உம்) “தேனக் கலர்கொன்றை பொன்னாகச் செஞ்சடையே
கூனற் பவளக் கொடியாகத் – தான
மழையாகக் கோடு மதியாகத் தோன்றும்
புழையார் தடக்கைப் பொருப்பு”
துளையுடன் விளங்கும் பெரிய கையையுடைய யானை மலை, தேன் துளிர்க்கும் கொன்றை மலர் பொன்னாகவும் செஞ்சடையானது நன்மையுடையதாகிய வளைந்த பவளக்கொடி போலவும், மதமானது மழை போலவும், மருப்பு சந்திரனை போலவும் தோற்றம் உடையதாயிற்று. விநாயகப் பெருமான் அணிந்திருக்கும் கொள்றை மலர் அவர்தம் சடைமுடி, மதம், மருப்பு ஆகிய பொருள்களை முறையே தம்மில் இயைபில்லாத பொருள்களான பொன், பவளக்கொடி மழை, சந்திரன் என உருவகிக்கப்பட்டுள்ளதால் இது இயைபிலி உருவகம் ஆயிற்று.
குறிப்பு: இயைபு உருவகத்தில் பொருளும் உருவகமும் தம்முள் ஒன்றுடன் ஒன்று இயைபுடன் இருத்தலையும் இங்கு உருவகமும் பொருளும் இயைபின்றி உள்ளதையும் காணமுடிகிறது.
6. வியநிலை உருவகம்
இது, அங்கம் பலவற்றுள் சிலவற்றை உருவகம் சிலவற்றை உருவகம் செய்தும் சிலவற்றை உருவகம் செய்யாதும் உரைத்து அங்கியை (அங்கி – அங்கத்தையுடைய பெண்) உருவகம் செய்து உரைப்பதாகும்.
(உம்) “செவ்வாய் நகையரும்பச் செங்கைத் தளிர்விளங்க
மைவாள் நெடுங்கண் மதர்த்துலவச் – செவ்வி
நறவலருஞ் சோலைவாய் நின்றதே நண்பா!
குறவர் மடமகளாம் கொம்பு.”
நண்பனே! சிவந்த வாய், பற்களை அரும்பவும் செங்கரங்கள் தளிரை விளக்கவும், வாளாகிய கண்கள் செழித்து உலவவும் தேன் துளிர்க்கும் சோலையின்கன் குறவர் குலமகளாகிய அப்பெண் பூங்கொம்பென நின்றவள். [நகை- பற்கள், முறுவல், மதர்த்தல்- செழித்தல், களித்தல்.)
விளக்கம்
குறவர் குலப் பெண்ணின் உறுப்புக்கள் ஈண்டு விவரிக்கப்பட்டன. இவற்றுள் கையை மட்டும் தளிர் என உருவகம் செய்து ஏனைய உறுப்புக்களான வாய், கண் ஆகியளவற்றை உருவகம் செய்யாததும், பெண்ணை (அங்கியை) மட்டும் கொம்பு என உருவகம் செய்ததும் வியநிலை உருவகம் ஆயிற்று.
7. சிறப்பு உருவகம்
ஒரு பொருளை எடுத்து அதற்குச் சிறந்த அடைமொழிகளை உருவகம் செய்து அவற்றால் உருவகமாக்கி உரைப்பதாகும்.
“விரிகடல்சூழ் மேதினி நான்முகன்மீ கானாச்
சுரநதிபாய் உச்சி தொடுத்த – அரிதிருத்தாள்
கடம்பாக எப்பொருளும் கொண்டபெரு நாவாய்
ஆம்பொலிவிற் றாயினதால் இன்று”
இவ்வுலகமானது, நான்முகனை மீகாமன் எனவும் தேவகங்கையைப் பாய் எனவும், அதன் உச்சியில் உடையதாகிய திருமால் உலகளக்க மேல்நோக்கி எழுப்பிய சீர்ப் பாதத்தைக் கூம்பு எனவாகவும், பல்வகைப்பட்ட பொருள்களும் அதனுள் விளங்கப் பெரியதொரு நாவாய் (கப்பல்) போன்று ஆகியது.
மேதினி – உலகம்; மீகாமன் – கப்பலைச் செலுத்துபவன். சுரந்தி – தேவ கங்கை; அரி – திருமால்; நாவாய் – கப்பல்; ஆல் – அசை)
விளக்கம்
இச்செய்யுளில் பிரமன் மீகாமனாகவும், தேவ கங்கை பாயாகவும், திருமாலின் திருப்பாதம் கூம்பாகவும் உருவகம் செய்ய, உலகம் கப்பல் ஆகியதால் இது சிறப்புப் பெற்ற உருவகம் ஆயிற்று.
8. விரூபக உருவகம்
இது ஒரு பொருளுக்குக் கூடாதவற்றைப் பலவும் கூட்டி உருவகம் செய்வதாகும்.
“தன் மதிக்குத் தோலாது தாழ்தடத்து வைகாது
முன் மருவும் தாள் மேல் முகிழாது -நண்ணி
இருபொழுதும் செவ்வி இயல்பாய் மலரும்
அரிவை வதனாம் புயம்,”
குளிர்ச்சியுடைய சந்திரனுக்குத் தோல்வி காணாமலும், ஆழ்ந்து விளங்கும் பொய்கையில் இல்லாமலும், முள் கொண்டு விளங்கும் தண்டின் மீது அரும்பாமலும் காலை மாலை ஆகிய இரு வேளையும் செவ்வியுடையதாய் மலரும் இயல்பு உடையது, என் காதலியின் முகம். [தோலாது- வாடாது, தோற்காது; தடம்- பொய்கை; முன்தாள் – தாமரைத் தண்டு; முகிழ்தல் – அரும்புதல்; அரிவை – காதலி, வதனம் – முகம்; அம்புயம் – தாமரை]
விளக்கம்
வெண், சந்திரனுக்குத் தோற்காத தன்மையும், பொய்கையில் வைகாமையும் முள்ளையுடைய தண்டின் மீது அரும்பாமையும் இருபொழுதும் மலர்தல் ஆகிய செம்மையும் தாமரையின் இயல்புக்கு ஒவ்வாமை. இவற்றை அத்தாமரை மலருக்கு ஏற்றி உரைக்கப்பட்டது. அத்தகைய தாமரையாகப் பெண்ணின் முகத்தை உருவகம் செய்தது விரூபக உருவகம் ஆயிற்று.
9. சமாதான உருவகம்
ஒரு பொருளை நன்கு உருவகம் செய்து பின்னர் அதனையே தீங்கு தருவதாகக் கூறி அத்தீங்கும் அதானாலே வருவதன்று எனப் பிறிதொரு காரணத்தைக் கூறுவதாகும். இதனைச் சமாதான உருவகம் என்பர்.
(உம்) “கைகாந்தள் வாய்குமுதம் கண்நெய்தல் காரிகையீர்
மெய்வார் தளிர்கொங்கை மென்கோங்கம் – இவ்வனைத்தும்
வன்மை சேர்ந்(து) ஆவி வருத்துவது மாதவமொன்(று)
இன்மையே அன்றோ எமக்கு,”
காரிகையீர்! உம்முடைய காந்தள் மலராகிய கையும், குமுத மலராகிய வாயும், நெய்தல் மலராகிய கண்னும், நீண்ட தளிராகிய மேனியும், மென்மையான கோங்கின் அரும்பாகிய மார்பகமும் என்னும் இவையனைத்தும் வலிமையோடு என் உயிரை வருத்துகின்றது. இதற்குக் காரணம் நான் முன்பு நல்வினை செய்யாமையே ஆகும். (ஆவி- உயிர். மாதவம்- நல்வினை]
விளக்கம்
இச்செய்யுளில் ஒரு பெண்ணின் உறுப்புக்களான கை, வாய், கண், மெய், கொங்கை, ஆகியவற்றை முறையே காந்தள், குமுதம். நெய்தல், தளிர், கோங்கு அரும்பு என உருவகம் செய்யப் பெற்றது. இத்தகைய உறுப்பு நலன் உடைய பெண் தன்னுயிரை வருத்துவதாக முன்னர் உரைத்துப் பின்னர் அது தன் தவத்தின் குறையே எனப் பிறிதொரு சமாதானம் கூறியிருத்தலின் இது சமாதான உருவகமாயிற்று.
10. உருவக உருவகம்
ஒரு பொருளை உருவகம் செய்து, அதனை மீண்டும் பிறிதொன்றாக உருவகம் செய்வதாம்.
(உம்) “கன்னிதன் கொங்கைக் குவடாங் கடாக்களிற்றைப்
பொன்னெடுந்தோள் குன்றே புனைகந்தா – மன்னவநின்
ஆகத் தடஞ்சே வகமாக யான் அணைப்பல்
சோகித் தருளேல் துவண்டு.”
தலைவனே! உன் காதலியின் மார்பகம் என்னும் மலையாகிய மதம் கொண்ட யானையை நின் அழகிய பெரிய தோளாகிய குன்றமே கட்டும் தறியாகவும் உன் மார்பகமே பரந்த இடமாகவும் விளங்க யான் செய்கின்றேன் நீ வருந்தாதே.
(குவடு- மலை; கடாம்-மதம்; குன்று- மலை; கந்து – யானை கட்டும் தறி; .ஆகம் – மார்பு: சோகித்தருளல் – வருத்தம் கொள்ளாதே]
விளக்கம்
இவண் கொங்கையைக் குவடு என உருவகித்து மீண்டும் அதனையே களிறாக உருவகம் செய்தமை காண்க. அதே போன்று தோளைக் குன்றாக உருவகம் செய்து அதனையே மீண்டும் கந்தாக உருவகம் செய்யப்பட்டுள்ளது. இதுவே உருவக உருவகம் எனப்படும்.
11. ஏகாங்க உருவகம்
ஒரு பொருளுக்குரிய அங்கம் பலவற்றுள்ளும் ஓரங்கத்தை மட்டும் உருவகம் செய்து ஏனைய அங்கங்களை வாளாக் கூறி நிற்றல் ஆகும்.
(உம்) “காதலனைத் தாஎன்(று) உலவும் கருநெடுங்கண்
ஏதிலனால் யாதென்னும் இன்மொழித்தேன் – மாதர்
மருண்ட மனமகிழ்ச்சி வாண்முகத்து வந்த
இரண்டினுக்கும் என்செய்கோ யான்.”
நெஞ்சமே! காதளவும் நீண்டு உலவும் கண் காதலனைத் தருவாய் என்பது போன்றிருந்தது. தேனாகிய இனியமொழி அயலானால் பயனில்லை என்பது போன்று இருந்தது. மாதர் மருட்சியின்கண் உள்ளக் களிப்பைக் கொடுக்கும் ஒளியுடைய முகத்தில் தோன்றிய இவ்விரண்டினுக்கும் யான் யாது செய்வேன்?
[ஏதிலன்- அயலான்; வாள் முகம்- ஒளியுடைய முகம். இரண்டு – இவண் நெடுங்கண்ணும் வாயும் ஆம்]
விளக்கம்
இப்பாடலில் கூறப்பட்ட பொருள் ஒரு பெண் ஆவள். அப்பெண்ணின் உறுப்புக்களுள் மொழி மட்டும் தேனாக உருவகித்து ஏனையவாகிய கண், முகம் ஆகிய இரண்டையும் உருவகம் செய்யாது வாளா இருந்தமையால் ஏகாங்க உருவகம் ஆயிற்று.
12. அநேகாங்க உருவகம்
ஒன்றன் அங்கம் பலவற்றையும் உருவகம் செய்து உரைப்பதாகும்.
(உம்) “கைத்தளிராற் கொங்கை முகிழ்தாங்கிக் கண்ணென்னும்
மைத்தடஞ்சேல் மைந்தர் மனங்கலங்க – வைத்ததோர்
மின்னுளதால் மேக மிசையுளதால் மற்றதுவும்,
என்னுளதாம் நண்பா இனி.”
நண்பனே! கையாகிய தளிரால் கொங்கையாகிய அரும்பைத் தாங்கிக் கண்ணாகிய குளிர்ந்த சேல்களால் ஆடவர் மனத்தைக் கலங்கச் செய்து அழிக்கும் ஒருத்தி கறுத்த மேகத்தைச் சுமந்து கொண்டு பூமியின்கண் நிற்கும் ஒரு மின்னல் உள்ளதென்றால் அது என் நெஞ்சுக்குள்ளே இருப்பதுவேயாகும்.
[முகிழ் – அரும்பு; தடம் – பொய்கை; சேல் – மீன்; மைந்தர் – ஆடவர்; மின் – மின்னல்; மிசை – பூமி, நிலம்; என்னுளது – என்னுடைய நெஞ்சினுள் இருக்கிறது]
விளக்கம்
இச்செய்யுளில் ஒரு பெண்ணின் கை, கொங்கை, கண், கூந்தல், வடிவம் ஆகிய பல உறுப்புக்கள் முறையே தளிர், அரும்பு, சேல், மேகம், மின்னல் என உருவகிக்கப்பட்டது. அங்க உறுப்புக்கள் பலவற்றையும் உருவகப்படுத்தி உரைத்தமையால் இது அநேகாங்க உருவகம் ஆயிற்று
13. முற்று உருவகம்
அவயவ அவயவகளை ஏற்ற இடத்தோடும் பிறவற்றோடும் முற்ற உருவகம் செய்து உரைப்பதாகும்.
(உம்) விழியே களிவண்டு மென்னகையே தாது
மொழியே முருகுலாந் தேறல் – பொழிகின்ற
தேமருவு கோதைத் தெரிவை திருமுகமே
தாமரையென் னுள்ளத் தடத்து.”
இவள் விழிகளே களிக்கின்ற வண்டு; மென்மையான பற்களே மகரந்தத் தாது; மொழியே நறுமணம் கமழும் தேன். தேன் மருவும் கூந்தல் உடைய இப்பெண்ணின் அழகிய முகமே தாமரை, இவையே என் உள்ளம் ஆகிய பொய்கையில் விளங்குவதாம். விழி – கண்; நகை – பல்; முறுவல்; முருகு – நறுமணம்; தேறல் தேன்; தேம் – தேன்; சிறப்பு; கோதை – கூந்தல்; தெரிவை – பெண்; கடம் – பொய்கை; உள்ளம் – மனம்)
விளக்கம்
இப்பாடலில் ஒரு பெண்ணின் விழி, நகை, மொழி, முகம் ஆகிய உறுப்புக்களை முறையே வண்டு தாது, தேன், தாமரை ஆக உருவகித்து அத்தகைய முகமாகிய தாமரை இருப்பதற்கு உரிய இடம் உள்ளமாகிய பொய்கை என உருவகித்தது முற்று உருவகமாயிற்று.
14. அவயவ உருவகம்
அவயவத்தை உருவகம் செய்து அவயவியை வாளாகவே உரைப்பது. அவயவி- அவயவத்தினை உடையது.
(உம்) “புருவச் சிலை குனித்துக் கண்ணம்(பு) என் உள்ளத்து
உருவத் துரந்தார் ஒருவர் – அருவி
பொருங்கற் சிலம்பிற் புனையல்குல் தேர்மேல்
மருங்குற் கொடிநுடங்க வந்து,”
அலங்கரிக்கப்பட்ட அல்குலாகிய தேரின் மீது ஏறி இடையாகிய கொடியசைய வந்து அருவிமோதும் மலைச் சரிவில் அன்றித் தம்புருவமாகிய வில்லை வளைத்துக் கண்ணாகிய அம்பினாலே என் உள்ளத்தில் ஊடுருவிப் போக ஒருவர் எய்தார். இதற்குயான் செய்யத் தகுந்தது யாது?
அருவி பொருங்கற் சிலம்பு – அருவி மோதும் மலைச் சரிவு; மருங்குல் – இடை, நுடங்குதல் – அசைதல்)
விளக்கம்
இப்பாடலில் ஒரு பெண்ணின் புருவம், கண், அல்குல், இடை ஆகிய உறுப்புக்களை மட்டும் உருவகித்து இவ்வுறுப்புக்கள் உடைய பெண்ணை மட்டும் உருவகம் சாற்றாது ஒருவர் எனக் கூறப்பட்டது. எனவே இது அவயவ உருவகம் ஆயிற்று. இது அநேகாங்க உருவகத்தை ஒப்ப உள்ளதாயினும் அவயவியை (பெண்) உருவகம் செய்யாது நிற்றலால் இவற்றின் வேற்றுமையை உய்த்துணர்க.
15. அவயவி உருவகம்
இது அவயவியை உருவகம் செய்து அவயவங்களை வாளா உரைத்தலாகும்.
(உம்) “வார்புருவம் கூத்தாட வாய்மழலை சோர்ந்தசைய
வேர் அரும்பச் சேந்துவிழிமதர்ப்ப – மூரல்
அளிக்கும் தெரிவை வதனாம் புயத்தால்
களிக்கும் தவம் உடையேன் கண்.”
முன்னர் யான் செய்த தவத்தின் பயனாக, இப்பெண்ணின் நீண்ட புருவம் அசையவும், வாயிலிருந்து வரும் மழலைச் சொல் குழைந்து தளரவும், நெற்றியில் சிறு வியர்வைத் துளி அரும்பவும், செவ்விய விழி செழித்து விளங்கவும், புன்முறுவல் நோக்கவும் முகமாகிய தாமரையினால் கண் களிக்கின்ற தன்மை பெற்றது. [கூத்தாட-அசைய; வாய் மழலை சோர்ந்து – வாய்ச் சொல் குழைந்து பொருள் விளங்காத படி வருதல்; மூரல் – புன்முறுவல் தெரிவை – பெண்; வதனாம் புயம் – முகமாகிய தாமரை; தவம் நல்வினை, பாக்கியம்]
விளக்கம்
இப்பாடலில் பெண்ணின் முகம் அவயவியாகும். அதனை மட்டும் தாமரை என உருவகித்து, அதன்கண் உள்ள உறுப்பு களான புருவம், வாய், விழி, முறுவல் ஆகியவற்றை உருவகிக்காது வெறுமனே உரைத்தமையால் இது அவயவி உருவகம் ஆயிற்று.