வழு என்றால் இலக்கண முறைப்படி குற்றம் என்று பொருள். இவ்வகைப்பாட்டில் வழு என்பதை கீழ்க்கண்டவாறு பாகுப்படுத்தலாம்.
(அ) வழாநிலை – குற்றம் இல்லாதது (பிழை இன்றி பேசவதும் எழுதுவதும்
ஆகும்)
(ஆ) வழு – குற்றம்
(இ) வழுவமைதி – குற்றத்தை ஏற்றுக்கொள்ளுதல்
(அ) வழாநிலை : ( இலக்கணப் பிழையற்ற முறை)
இலக்கணம் : இலக்கணப் பிழை இன்றிப் பேசுவதும் எழுதுவதும் வழாநிலை எனப்படும்.
(எ.கா) குயில் கூவும்
நாய் குரைக்கும்
மேலும்,
(எ.கா) ”நான் நாளை வருவேன்”
நான் என்பது தன்மை ஒருமைப் பெயர்; ‘நாளை’ என்பது எதிர்காலம் காட்டும். இவைகளுக்கு ஏற்ற வினைமுற்று ‘வருவேன்’ என்பது. இவ்வாறு இலக்கணமுறை வழுவாமல் பேசுவதும் எழுதுவதும் வழாநிலை எனப்படும்.
(ஆ) வழு : (வழு – குற்றம்)
இலக்கணம் : இலக்கண முறைக்கு மாறாகப் பேசுவதும் எழுதுவதும் வழு எனப்படும்.
(எ.கா) பால் தருவது காளையா? பசுவா? ( இது வழுவாக வந்துள்ள வினா)
மேலும், (எ.கா) நான் நாளை வந்தேன்.
‘நாளை’ என்னும் எதிர்காலத்தைக் குறிக்கும் சொல்லோடு ‘வந்தேன்’ என்னும் இறந்தகால வினைமுற்றைச் சேர்த்துக் கூறுவது இலக்கணப் பிழையாகும். இவ்வாறு பேசுவதும் எழுதுவதும் வழு எனப்படும்.
(இ) வழுவமைதி : (வழு – குற்றம், அமைதி – ஏற்றுக்கொள்ளுதல்)
இலக்கணம் : பேச்சு வழக்கிலும் செய்யுள் வழக்கிலும் திணை, பால், எண், இடம், காலம், மரபு முதலிய இலக்கண முறைக்கு மாறாக வருவனவற்றை ஒரு காரணம் கருதி இலக்கண முறையாக அமைத்துக் கொள்வது வழுவமைதி எனப்படும்.
(எ.கா) தாய் தன் குழந்தையை, ‘என் கண்ணே! கண்மணியே‘ எனப் பாராட்டுவது அன்பு காரணமாக வந்த வழுவமைதி ஆகும்.
உணவு உண்டு கொண்டிருக்கின்றவனை, அவன் நண்பன் அழைக்கும்பொழுது ‘உணவு உண்டேன், வந்தேன்’ கூறுவது வழு ஆகும். ‘உணவு உண்கிறேன், உண்டபின் வருவேன்’ என்று கூறுவது வழாநிலை ஆகும். ஆனாலும், ‘உண்டேன், வந்தேன்’ என்னும் விடையை ஒரு காரணம் பற்றி ஏற்றுக் கொள்ளலாம். விரைந்து வருவேன் என்னும் குறிப்புத் தோன்ற ‘உண்டேன் வந்தேன்’ என்று கூறியதால், இது வழுவாயினும் வழு அமைதியாக ஏற்றுக் கொள்ளப்படும். இது, விரைவு காரணமாக எதிர்காலச் சொல் இறந்தகாலச் சொல்லாக வந்த வழு அமைதி ஆகும்.
வழுவமைதி என்பது ஐந்து வகைப்படும்
1.திணை வழுவமைதி
2.பால் வழுவமைதி
3.இட வழுவமைதி
4.கால வழுவமைதி
5.மரபு வழுவமைதி எனப் பிரிக்கலாம்.
(அ) திணை வழுவமைதி
உவப்பு, உயர்வு, இழிவு, சிறப்பு, சினம் ஆகியவை காரணமாக ஒருதிணைச் சொல் மற்றொரு திணைச் சொல்லாக வருவது திணை வழுவமைதி எனப்படும்.
(எ.கா)
1. திங்களும் சான்றோரும் ஒப்பர் (உயர்வு)
2. அரசனே! நீயே எங்களுக்குத்தாய் (சிறப்பு)
3. மூர்க்கனும் முதலையும் கொண்டது விடா (இழிவு)
4. பசுவை, ‘என் தாயே` என அழைத்தல் (உவப்பு)
5. குறிப்பறிய மாட்டாதவன் நன் மரம் (சினம்)
(ஆ) பால் வழுவமைதி
உவப்பு, உயர்வு, சிறப்பு, இழிவு, சினம் ஆகியவை காரணமாக ஒருபால் சொல் மற்றொருபால் சொல்லாக வருவது பால் வழுவமைதி எனப்படும்.
(எ.கா)
1. தாய் தன் மகளைக் ‘கண்ணா! வா’ என அழைப்பது உவப்பு ‘நோக்கிக் கொண்ட பால் வழுவமைதி
2. ‘தமிழ்ச்செல்வன் வந்தார்’ – தமிழ்ச்செல்வன் என்னும் ஒருமைக்கு ‘வந்தார்’ என்னும் பன்மை முடிவு வந்துள்ளது. இது வழுவாயினும் ‘உயர்வு’ நோக்கிய பால் வழுவமைதி ஆயிற்று.
3. தாயும் நீயே; தந்தை நீயே,
ஆயும் நின்பால் அன்பு கொண்டேன்’
ஈண்டுத் தந்தையாகிய இறைவனைத் ‘தாய்’ எனப் பெண்பாலாக் கூறியது, ‘சிறப்பு’ நோக்கிக் கொண்ட பால் வழுவமைதி ஆயிற்று.
4. ‘வாள் ஏந்தினும் இவன் பேடி’ என்றது இழிவு நோக்கிக் கொண்ட பால்வழுவமைதி ஆயிற்று.
சிறப்பு, உயர்வு ஆகியவை காரணமாகத் தன்மை, முன்னிலை, படர்க்கை இடச்சொற்கள் மாறிவருவது இட வழுவமைதி எனப்படும்.
(எ.கா)
தாய் தன் மகனை நோக்கி, அம்மாவுக்காக நீ இதைச்செய்’ என்று கூறினாள் – இஃது ‘எனக்காக’ என்னும் தன்மை இடச்சொல் ‘அம்மா’ எனும் படர்க்கை இடச்சொல்லாக வந்தது இடவழுவமைதி ஆகும்.
(ஈ) கால வழுவமைதி
விரைவு, தெளிவு, மிகுதி ஆகியவை காரணமாக ஒரு காலத்திற்குரிய சொல்லை வேறொரு காலத்திற்குரிய சொல்லாகக் கொள்வது காலவழுவமைதி ஆகும்.
(எ.கா)
”நல்லது செய்யின் சுவர்க்கம் புக்கான்”
தெளிவு பற்றி எதிர்காலம் இறந்த காலமாகக் கூறப்பட்ட கால வழுவமைதி.
குறிப்பு: மூன்று காலத்திற்கும் பொதுவான தன்மை உடைய பொருள் அல்லது செயலுக்கு நிகழ்கால வினைமுற்று கொடுத்துக் கூறல் வேண்டும்.
(எ.கா) மலை நிற்கிறது, ஆறு ஓடுகிறது.
(உ) மரபு வழுவமைதி
நம் முன்னோர் எப்பொருளை எச்சொல்லால் எம்முறையில் வழங்கினரோ. அப்பொருளை அச்சொல்லால் அம்முறைப்படியே நாமும் வழங்குவது மரபு ஆகும். ஆனால் ஏதேனும் ஒரு காரணம் பற்றி மரபு மாறி வழங்குதல் ஏற்றுக் கொள்ளப்படுமாயின் அது மரபு வழுவமைதி எனப்படும்.
(எ.கா)
’கத்தும் குயிலோசை என்றன் காதில் விழவேண்டும்”
விளக்கம் : குயில் கூவும் என்பது மரபு. அதற்கு மாறாக, ‘கத்தும்’ என்று கூறியது மரபு வழுவாயினும் பெருங்கவிஞர் பாடினார் என்னும் காரணம் நோக்கி மரபுவழுவமைதி ஆயிற்று.